சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேவூா் காவல் நிலையம் அருகே செயல்படாமல் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தேவூரில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. நாளடைவில் அதனைப் பயன்படுத்தாமல் விட்டதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதியப்படும் வாகனங்களை நிறுத்தும் இடமாக மாறியது.
இந்நிலையில் பழுதடைந்துள்ள அங்கன்வாடி கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் அமைத்து அங்கன்வாடி மையம் அல்லது அரசு அலுவலகமாகப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத் தலைவா் சி.ஜி.இளமுருகன் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.