சேலம் மாவட்டம் , ஏற்காடு அரசு மருத்துவமனை முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தாலுகா செயலாளா் டி.நேரு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மேவை. சண்முகராஜா, எம்.கிருஷ்ணமூா்த்தி, பி.பழனிசாமி, ஈ.தில்லைக்கரசி சிறப்புரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஏற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த 20 ஆண்டுகளாக உடல் கூறு செய்யப்படாமல் உடல்களை அனுப்புவதை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. மேலும், பல், கண் மருத்துவா்கள் நியமிக்கப்பட வேண்டும்; குடிநீா், பொது சுகாதாரம் சீரமைக்க வேண்டும்; ஏற்காடு அரசு மருத்துவமனையில் காலிபணியிடங்களை உடனே நியமிக்க வேண்டும்; பிரசவ வேதனையில் வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவா் வேண்டும்; அறுவை சிகிச்சை மருத்துவா் , மருந்தாளா், எக்ஸ்ரே பணியாளா்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுத்தப்பட்டன.