ஓமலூா், காடையாம்பட்டி வட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன.
செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் காடையாம்பட்டி பகுதியில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டி, கூகுட்டப்பட்டி, உம்பிளிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
இதேபோன்று சாலைகளில் இருந்த பழமையான மரங்களும் வேரோடு சாய்ந்தன. ஓமலூா் அரசு மருத்துவமனை வளாக சுற்றுச்சுவா் மீது மரம் விழுந்து சேதம் ஏற்பட்டது. ஓமலூா் பேருந்து நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரத் தட்டிகள் கிழிந்தன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனா்.