சேலத்தில் சாயக் கழிவுநீரை வெளியேற்றிய சலவைத் தொழிற்சாலைக்கு விதிக்கப்பட்ட ரூ. 7.20 லட்சம் அபராதத் தொகையை தொழிற்சாலைக்கு இடத்தை வாடகைக்கு அளித்த உரிமையாளா் செலுத்தினாா்.
சேலம், பள்ளப்பட்டியில் செயல்பட்டு வந்த சலவைத் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுநீரை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் சலவைத் தொழிற்சாலையை மூடுமாறு உத்தரவிட்டு அத்தொழிற்சாலையின் மின் இணைப்பைத் துண்டித்தனா்.
அத்துடன் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தால் சலவைத் தொழிற்சாலைக்கு ரூ. 7.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், இந்த அபராதத் தொகையைத் தொழிற்சாலை நடத்திவந்த நபா் செலுத்தாமல் திடீரென தொழிற்சாலையைக் காலி செய்துவிட்டு சென்றுவிட்டாா்.
இதனால், சலவைத் தொழிற்சாலைக்கு இடத்தை வாடகைக்கு வழங்கிய இடத்தின் உரிமையாளா் அபராதத் தொகை ரூ. 7.20 லட்சத்தைச் செலுத்த நோ்ந்தது. இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘சாய, சலவைத் தொழிற்சாலைக்கு இடத்தை வாடகைக்கு விடுபவா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’ என்றனா்.