சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே நங்கவள்ளி மாமரத்து மேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த பத்து நாள்களாக இந்த கிராமத்தில் குடிநீர் விநியோகம் இல்லை.
இது குறித்து பெரிய சோரகை ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழு அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பல முறை முறையிட்டனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாமரத்து மேடு பொது மக்கள் குடிநீர் கேட்டு இன்று காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நங்கவள்ளி - தாரமங்கலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த நங்கவள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து, அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் நங்கவள்ளி - தாரமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.