வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி வாசவி சங்கம் சார்பில் நூலகம், அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
வாழப்பாடி வாசவி சங்கத்தின் ஆளுநர் அலுவல் முறை வருகை விழா செவ்வாய்க்கிழமை வாசவி மஹால் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு, வாசவி சங்கத் தலைவர் கௌதம் தலைமை வகித்தார். செயலாளர் ராம்குமார் வரவேற்றார். பன்னாட்டு தலைவர் பட்டா சுதர்சன் சங்க நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து, மாவட்ட ஆளுநர் சதீஷ்குமார், துணை ஆளுநர் வாழப்பாடி சாய்ராம் ஆகியோர் முன்னிலையில், வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆயிரம் லிட்டர் கொள்ளளவு குடிநீர் தொட்டி, வாழப்பாடி கிளை நூலகத்திற்கு நூல்கள் அடுக்கும் இரண்டு ரேக்குகள், வாழப்பாடி புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைமேடை ஆகிய நலத்திட்டங்கள் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி வட்டாரத்தில் இயங்கும் 12 அங்கன்வாடி மையங்களுக்கு கோரைப்பாய்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய வாசவி சங்க பன்னாட்டு தலைவர் பட்டா சுதர்சன், 'வாழப்பாடி வாசவி சங்கத்தின் சார்பில், அண்மையில் வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு, சதாபிஷேக திருமண விழா நடத்தியதும், அரசு பள்ளிகள், நூலகம் அங்கன்வாடி மையத்திற்கு ரூ. 50,000 செலவில் நலத்திட்ட உதவிகள் வழங்கியதும் பாராட்டுக்குரியது என்றார்.
இவ்விழாவில், வாசவி சங்க மாவட்ட அமைச்சரவை செயலாளர் பாலமுருகன், பொருளர் சதீஷ், மண்டல தலைவர் அம்பி மற்றும் வாழப்பாடி வாசவி சங்க பொருளர் பத்மநாதன், திலக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக, சிவகுமார் நன்றி கூறினார்.