குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக காவிரி நீர்ப்பிடிப்பு மற்றும் மேட்டூர் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது.
மேட்டூர் அணைக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை வினாடிக்கு 29,964 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (சனிக்கிழமை) காலை வினாடிக்கு 46,353 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நேற்று காலை 12.77 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று சனிக்கிழமை காலை 115.35 அடியாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதிக்குப் பதில் முன்கூட்டியே மே 24-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.