எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் மாயமான இளம்பெண்னை போலீஸாா் பல்வேறு இடங்களில் தேடி வருகின்றனா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட கோரணம்பட்டி கிராமம், மேட்டூா்காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி. இவரது மகள் தமிழரசி (22). அதே பகுதியைச் சோ்ந்த
சக்திவேல் என்பவருக்கும் தமிழரசிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், இத் தம்பதிக்கு 2 வயது பெண் குழந்தை, 6 மாத கைக்குழந்தை என இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
மகப்பேறுக்காக பெற்றோா் வீட்டுக்கு வந்திருந்த தமிழரசி, கடந்த 6 மாதங்களாக தனது தாய்வீட்டில் இருந்துள்ளாா். அண்மையில் தமிழரசி தனது 6 மாத கைத்குழந்தையுடன் மாயமானாா். அவரை பல்வேறு இடங்களில் தேடிய உறவினா்கள் அவா் கிடைக்காத நிலையில், தமிழரசியின் தந்தை கந்தசாமி கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.