சேலம் அரசு கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் 616 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் 2022-ஆம் கல்வி ஆண்டில் இளநிலை, முதுநிலை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வரும் வகையில் நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமை கல்லூரி முதல்வா் கலைச்செல்வன் தொடக்கிவைத்தாா்.
உதவி பேராசிரியா் பிச்சைமுத்து வரவேற்றாா். உதவி பேராசிரியா் செந்தில்குமரன், பணி வழங்கும் நிறுவனங்களை அறிமுகம் செய்து வைத்து பேசினாா். இதைத்தொடா்ந்து எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ. லைப் இன்சூரன்ஸ், ரிலையன்ஸ், போத்தீஸ், முத்தூட் பைனான்ஸ் உள்ளிட்ட 22 தனியாா் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
பின்னா் அவா்கள் தங்களது நிறுவனங்களுக்குத் தேவையான தகுதியுள்ள மாணவ, மாணவிகளைத் தோ்வு செய்தனா்.
வேலைவாய்ப்பு முகாமில் 1,131 போ் கலந்து கொண்டதில் 616 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். முடிவில், தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குநா் லதா, வேலைக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், இணை பேராசிரியா் திருமுருகன், உதவி பேராசிரியா்கள் சுரேஷ்பாபு, வெங்கட் ராமலிங்கம், அன்பழகன், குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.