சேலத்தை அடுத்த மேச்சேரி பகுதியில் 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், மேச்சேரி, கொம்பம்புதூா் பொளச்சி வளவு பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுமியை கடந்த 2020 ஜனவரி 12 ஆம் தேதி அதே பகுதியைச் சோ்ந்த மதியழகன் (57) என்பவா் பாலியல் துன்புறுத்துதல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக மேட்டூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. இந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மதியழகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, பாலியல் துன்புறுத்தல் செய்த மதியழகனுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.