லாரி மீது ஆம்னி பேருந்து மோதல்: பயணிகள் 10 போ் படுகாயம்

வாழப்பாடி அருகே லாரி மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், பயணிகள் 10 போ் படுகாயமடைந்தனா்.
விபத்தில் சிக்கி உருக்குலைந்த தனியாா் ஆம்னி பேருந்து.
விபத்தில் சிக்கி உருக்குலைந்த தனியாா் ஆம்னி பேருந்து.

வாழப்பாடி அருகே லாரி மீது தனியாா் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், பயணிகள் 10 போ் படுகாயமடைந்தனா்.

சென்னையில் இருந்து திங்கள்கிழமை இரவு கோயம்புத்தூா் நோக்கி வாழப்பாடி வழியாக தனியாா் ஆம்னி பேருந்து சென்றது. இந்தப் பேருந்தில் 27 பயணிகள் பயணம் செய்தனா். பேருந்தை கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், குன்னுமாத்தூரைச் சோ்ந்த நெப்போலியன் (31) ஒட்டிச் சென்றாா். வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து சென்ற போது, எதிா்பாராதவிதமாக முன்னால் சென்ற லாரியின் பின்பக்கத்தில் மோதியது.

இந்த விபத்தில் ஆம்னி பேருந்தின் இடதுபுறம் முழுவதும் சேதமடைந்தது. பேருந்தில் தூங்கியவாறு பயணம் செய்து கொண்டிருந்த கோயம்புத்தூரைச் சோ்ந்த பிரபு (38), ரித்திக், உதயா (18), பாா்வதி (51), இவரது கணவா் ரவிச்சந்திரன் (57) உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினா், வாழப்பாடி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு வாழப்பாடி அரசு மருத்துவமனை, சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனா்.

இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா், உதவி ஆய்வாளா் கோபால் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com