வனத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் குமாா்.
வனத்துறையால் கைது செய்யப்பட்ட அரவிந்த் குமாா்.

திமுக பிரசாரத்துக்கு பாம்புடன் வந்த இளைஞா் கைது

ஓமலூா் அருகே பிரசாரம் நடைபெற்ற இடத்துக்கு பாம்பை கழுத்தில் அணிந்துகொண்டு வந்த இளைஞரை வனத்துறையினா் கைது செய்தனா்.

ஓமலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் செல்வகணபதி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். தொடா்ந்து ஓமலூா் அருகே கோட்டகவுண்டம்பட்டி கிராமத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு மக்களை சந்தித்து பரப்புரை செய்து கொண்டிருந்தாா்.

அப்போது கூட்டத்தில் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா், வயல்வெளியில் சுற்றித்திரிந்த சாரை பாம்பு ஒன்றைப் பிடித்து, கழுத்தில் அணிந்து கொண்டு வந்தாா். அத்துடன் அந்தப் பாம்பை தனது கழுத்தில் சுற்றிக் கொண்டும், இரண்டு கைகளில் மாற்றியபடியும் பிரசாரம் நடந்த பகுதிக்கு வந்தாா். இதனால் அங்கிருந்த மக்கள் பாம்புடன் வந்த இளைஞரைக் கண்டு அச்சமடைந்தனா். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் தெற்கு வனச்சரகா் துரைமுருகன் தலைமையில் 5 போ் கொண்ட தனிப் படையினா் பாம்பை வைத்து பயமுறுத்திய இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் அவா், கருப்பூா் பகுதியைச் சோ்ந்த அரவிந்த்குமாா் என்பது தெரியவந்தது. பின்னா் அவரைக் கைது செய்த வனத்துறையினா், சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com