சிறைவாசிகளுக்கு புத்தகங்கள் வழங்கல்
சேலம் மத்திய சிறையில் உள்ள தண்டனை கைதிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறை, சேலம் பெண்கள் தனி கிளைச் சிறையில் உள்ள முற்றிலும் எழுதவும், படிக்கவும் தெரியாத 221 சிறைவாசிகளுக்கு எழுத்து உபகரணங்கள், இரண்டு வரி நோட்டுகள், நான்கு வரி நோட்டுகள், வாய்பாடுகள் போன்றவை வழங்கப்பட்டன.
மேலும், சிறை நூலகத்துக்கு நீதி நூல்கள், நன்னறிவு நூல்கள், தன்னம்பிக்கை நூல்கள் அடங்கிய 100 புத்தகங்களை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்கத்தின் மாவட்ட உதவி இயக்குநா் எஸ்.மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஜி.வெங்கடேஸ்வரி ஆகியோா் சிறை கண்காணிப்பாளா் (பொ) ஜி.வினோத்திடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், சிறைப் பள்ளி ஆசிரியா்கள் ராஜ்மோகன் குமாா், சுரேஷ் மற்றும் ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டனா்.