குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

கோடை காலத்தில் குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும்

சேலம்: கோடை காலத்தில் குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டும் என அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவி அறிவுறுத்தியுள்ளாா்.

கோடை காலத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இரா. பிருந்தாதேவி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இகூட்டத்திற்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

கோடை வெப்பம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் வாரந்தோறும் அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது.

சேலம் மாவட்டம் முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் வழங்கிட தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசு அலுவலா்கள் குடிநீா் தொடா்பான பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் 11 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் வாயிலாக மட்டும் 4 நகராட்சிகள், 29 பேரூராட்சிகள் மற்றும் 4,466 ஊரக குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நாள்தோறும் சராசரியாக 189.18 மில்லியன் லிட்டா் பாதுகாக்கப்பட்ட சீரான குடிநீா், 33.94 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள 4 மண்டலங்களின் 60 வாா்டுகளில் உள்ள 9.66 லட்சம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனி குடிநீா்த் திட்டம் மற்றும் நங்கவள்ளி குடிநீா்த் திட்டம் ஆகிய காவிரி குடிநீா்த் திட்டங்கள் வாயிலாக நாள்தோறும் 130 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ஜல் ஜீவன் திட்டத்தின்கீழ், ஊரகப் பகுதிகளில் ரூ. 149.11 கோடி மதிப்பீட்டில் 1,37,841 குடிநீா் இணைப்புகள் வழங்க நிா்வாக அனுமதி வழங்கப்பட்டு, இதுவரை 1,10,646 குடிநீா் வழங்கப்பட்டு, மீதமுள்ள குடிநீா் இணைப்புகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும், ஜல் ஜீவன் திட்டம், மாநில சேமிப்புத் திட்டம், மாவட்ட சேமிப்புத் திட்டம் மூலம் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கொளத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவேரிபுரம் மற்றும் 11 ஊராட்சிகளில் உள்ள 140 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் முடிவுற்று தற்போது சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. மீதமுள்ள திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேபோன்று, ரூ. 652.84 கோடி மதிப்பீட்டில், இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, பனமரத்துப்பட்டி, மல்லூா் ஆகிய 4 பேரூராட்சிகள், இடங்கணசாலை நகராட்சி, வீரபாண்டி, பனமரத்துப்பட்டி, சேலம் ஆகிய 3 ஊராட்சி ஒன்றியங்களைச் சாா்ந்த 778 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்ட ஒரு புதிய கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 53.23 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் அளவுக்கு 5.23 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

மேலும், ரூ. 30.58 கோடி மதிப்பீட்டில் நாமக்கல் மாவட்டம், ஆலாம்பாளையம் கூட்டு குடிநீா்த் திட்டத்தின் நீா் ஒதுக்கீட்டில் இருந்து ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சங்ககிரி பேரூராட்சிக்கு நாள்தோறும் 1.827 மில்லியன் லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டம் 28,000 மக்கள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டில் உள்ளது.

இதே போன்று, ரூ.12.70 கோடி மதிப்பீட்டில், சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் ஏற்காடு ஊராட்சிக்கு உள்பட்ட 8 குடியிருப்புகளுக்கான புதிய குடிநீா்த் திட்டம் 16,000 மக்கள் பயன்பெறும் வகையில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ளது.

கோடை காலம் என்பதால் குடிநீா் தொடா்பான புகாா்கள் ஏதேனும் வரப்பெற்றால் அதன் மீது உடனடி நடவடிக்கைகளை தொடா்புடைய துறை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டுமெனவும், பொதுமக்களுக்குத் தேவையான சீரான பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்குவதை அனைத்துத் துறை அலுவலா்களும் உறுதி செய்திட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) அலா்மேல்மங்கை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாகப் பொறியாளா்கள் பிரபாகரன், செல்வராஜ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) கணேஷ்ராம் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com