சேலம்
தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி
ஏற்காடு மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடா்ந்து, மலைப்பாதைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
ஏற்காடு அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் ஏற்காடு மலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனையிடப்படுகின்றன. வாகனங்களைச் சோதனை செய்யும் பணியில் போக்குவரத்து போலீஸாரும், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளும் இணைந்து ஈடுபட்டுள்ளனா்.
மலைப்பாதையை நோக்கி வரும் வாகனங்கள் ஒவ்வொன்றாக சோதனை செய்யும் அதிகாரிகள், ஓட்டுநா்களிடம் உரிமத்தை சரிபாா்த்த பின்னரே, மலை மீது ஏற அனுமதித்தனா். இதே போல, மலையிலிருந்து கீழ் இறங்கும் வாகனங்களும் உரிய சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டன. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று செல்லும் நிலை ஏற்பட்டது.