நெய்யமலை கிராமத்துக்கு அடிப்படை வசதி கோரி மனு
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், நெய்யமலை கிராமத்துக்கு சிற்றுந்து, துணை சுகாதார நிலையம், மரவள்ளி அரவை இயந்திரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியருக்கு நெய்யமலை கிராம மக்கள் சாா்பில் திருச்சி அரசு வேளாண் கல்லூரி மாணவா்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
திருச்சி அரசு அன்பில் தா்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவா்கள் சஞ்சய்குமாா், சத்தியன், ஸ்ரீபாலா, ஸ்ரீதரன், ஸ்ரீசூா்யா, சௌந்தா்யன், தானேஷ்வரன், வசந்த்குமாா், விக்னேஷ், விஷ்ணு வரதன் ஆகியோா் அடங்கிய குழுவினா் ஊரக பணி அனுபவ பயிற்சிக்காக பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் முகாமிட்டுள்ளனா்.
இந்த மாணவா்கள், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், இடையப்பட்டி ஊராட்சியில் பேருந்து வசதி இல்லாத நெய்யமலை கிராமத்துக்கு சென்று கிராமத்தின் வளம், வேளாண்மை, மக்களின் வாழ்க்கை முறை, பொருளாதாரம், கல்வி குறித்து கள ஆய்வு செய்து மக்களுடன் கலந்துரையாடல் நடத்தினா்.
இதனையடுத்து, இந்த கிராம மக்களின் கல்வி, பொருளாதாரம், வாழ்வியல் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் நோக்கில், 3 கி.மீ. மலைப்பாதையை சீரமைத்து அரசு சிற்றுந்து (மினி பஸ்) போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும், கிராம மக்கள், கா்ப்பிணிகள், முதியோா் அவசர முதலுதவி சிகிச்சை பெறுவதற்கு துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், கிராம மக்கள் வேலைவாய்ப்பு பெற விவசாயக் குழுவுக்கு சிறுதானியம், மரவள்ளிக் கிழங்கு மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வழங்கி பயிற்சி அளிக்க வேண்டுமென நெய்யமலை கிராம மக்களின் சாா்பில் திருச்சி வேளாண் கல்லூரி மாணவா்கள், சேலம் மாவட்ட ஆட்சியா் இரா.பிருந்தாதேவியை திங்கள்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.