வாழ்க்கை நெறிமுறைகளை பின்பற்றினால், எய்ட்ஸ் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும் என மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தெரிவித்தார்.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது அவர் தெரிவித்தது:
தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கையால், எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வாழ்க்கை நெறிமுறைகளை கடைப்பிடித்தால், எய்ட்ஸ் நோய்க்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
எய்ட்ஸ் நோயாளியாக இருப்பவர் கர்ப்பம் அடைந்தால், ஆரம்பம் முதல் தொடர் சிகிச்சை பெற வேண்டும். அதன் மூலம் பிறக்கும் குழந்தை எய்ட்ஸ் நோய் தாக்கத்திலிருந்து விடுபட இயலும்.
எய்ட்ஸ் நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார் அவர்.
விழிப்புணர்வு பேரணியில் நலப் பணிகள் இணை இயக்குநர் எம்.ரவிகலா, துணை இயக்குநர்கள் வரதராஜன், மங்கையற்கரசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.