தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை திண்டுக்கல் மாவட்டத்தில் குறைந்து வருவதாக, சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சுகாதாரத் துறை மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கிய இப்பேரணியை, ஆட்சியர் ந. வெங்கடாசலம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொழு நோயாளிகளின் எண்ணிக்கை, கடந்த 15 ஆண்டுகளாகக் குறைந்து வருவதாகவும், கடந்த 1997ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 10 ஆயிரம் பேருக்கு 5 தொழு நோயாளிகள் இருந்துள்ளனர். தற்போது, ஒரு லட்சம் பேரில் இருவருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், தொழு நோயாளிகளின் எண்ணிக்கை முழுமையாக குறைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பாதித்தவர்களுக்கு, அந்தந்தப் பகுதி அரசு ஆரம்ப சுகதார நிலையங்கள் மற்றும் நகர் நல மையங்கள் மூலமாக இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், நோயின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு, அறுவைச் சிகிச்சையுடன் ரூ. 8000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
பேரணியில், அரசு தலைமை மருத்துவமனை செவிலியர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டு, தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.
நிகழ்ச்சியில், நலப்பணிகள் இணை இயக்குநர் சி. சுப்பிரமணி, துணை இயக்குநர்(தொழுநோய்) சு. அமுதா, அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் எஸ். பிரபாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.