கொடைக்கானலில் முன்கூட்டியே சீசனை அனுபவிப்பதற்காக கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலையில் குளிரும் நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சில தினங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வந்தது. இந்நிலையில், கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் கூடியது. சுற்றுலா இடங்களில் ஏராளமானோர் காணப்பட்டனர். மாலை நேரங்களில் நிலவும் இதமான சூழ்நிலையில், ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச் சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் மகிழ்கின்றனர். பொதுவாக, கொடைக்கானலில் ஏப்ரல் மாதம் 2 ஆவது வாரத்தில் சீசன் தொடங்கி, ஜூன் 15-ஆம் தேதியில் முடிவடையும். இந்தாண்டு முன்கூட்டியே சுற்றுலாப் பயணிகள் சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.