இணைய வழி பத்திரப் பதிவுகள் நடைபெறும் போது, போலி பதிவுகளை முழுமையாக தடுக்க முடியும் என மதுரை மண்டல துணைப் பதிவுத்துறை தலைவர் சு.சிவக்குமார் தெரிவித்தார்.
வத்தலகுண்டுவில் உள்ள தனியார் மஹாலில் வெள்ளிக்கிழமை மதுரை மண்டல பத்திரப் பதிவுத்துறை சார்பில் நடைபெற்ற மென்பொருள் வழியாக கணினி மூலம் இணையதள பத்திரப் பதிவு குறித்த பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது: தற்போது புதிய மென்பொருள் மூலம் இணையதளத்தில் பொதுமக்களே நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய முறையில் பத்திரம் பதிவு செய்வதற்கு முன்னதாக தகவல் தெரிவித்து, அலுவலகம் மூலம் குறிப்பிடப்படும் நாளிலேயே பதிவு செய்துகொள்ள முடியும். ஆவணங்கள் முழுவதும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்ட பின் பத்திரப் பதிவுக்கு ஏற்றுக் கொள்ளப்படும். இனி போலி பத்திரங்கள் பதிவு செய்வது முற்றிலும் தடுக்கப்படும் என்றார்.
பொதுமக்களே நேரடியாக பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளதால், பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கருத்திரங்கில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த சு.சிவக்குமார், தற்போதும் பத்திரங்களை பொதுமக்களே எழுதிக் கொள்ளலாம் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஆனால், பொதுமக்கள் யாரும் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. அதுபோலவே இணைய தள வசதியும் அமையும் என்பதால், பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்பில்லை என்றார்.
முன்னதாக மாவட்ட பதிவாளர்கள் சே.பூங்கொடி (திண்டுக்கல்) , சி.செந்தில்குமார்(தேனி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.