தடுமாற்றத்தை மாணவர்கள் தகர்த்தெறிந்தால், எதிர்கால இலக்குகளை எளிதாக அடைய முடியும் என துளிமை மையத்தின் தலைவர் ரா.விஜயராகவன் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாணவர்கள் கல்வி கற்பதன் நோக்கம் மற்றும் எதிர்கால இலக்குகளை அடைவது குறித்த ஆலோசனை கருத்தரங்குக்கு பள்ளித் தலைமையாசிரியை அ.கஸ்தூரி தலைமை வகித்தார். இதில் திண்டுக்கல் துளிமை வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மையத் தலைவர் ரா.விஜயராகவன் பேசியதாவது: ஓய்வு நேரத்தில் இயல்பாக ஒருவர் மேற்கொள்ளும் செயலே, அவரது வாழ்க்கைகான இலக்காக அமையும். அதனை அடைவதற்கு தீவிர முயற்சியோடு, கடின உழைப்பையும் வழங்கினால் உறுதியாக வெற்றி பெற முடியும்.
முதல் தடைக்கற்களாக உள்ள தடுமாற்றம் மற்றும் தயக்கம் என்னும் நிலைகளை எளிதில் கடந்து செல்லத் தெரிந்தவர்கள் உறுதியாக சாதிக்கலாம்.
நமது மூளையின் வேகம் 20 நிமிடங்களுக்கு மேல் குறைந்துவிடும். அதனால், 20 நிமிடங்களுக்கு ஒரு முறை வெவ்வேறு பாடங்களின் மீது கவனத்தை செலுத்த வேண்டும். 15 நிமிடங்கள் படித்தால், 5 நிமிடங்கள் அவற்றை எழுதிப் பார்க்க வேண்டும் என்றார்.