பெண்களுக்கு தேவையான அனைத்து வசதிகளுடன் கூடிய சுனிதி கழிப்பறையை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திறந்து வைத்த ஆட்சியர் டி.ஜி.வினய், மேலும் 8 இடங்களில் இந்த வகை கழிப்பறைகள் நிறுவப்படும் என்றார்.
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பெண்களுக்கான சிறப்பு கழிப்பறையை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை திறந்து வைத்தார்.
கடந்த 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 61.5 கோடி பேர் திறந்தவெளியில் மலம் கழிப்பவர்களாக உள்ளனர். மத்திய, மாநில அரசின் முயற்சியால் திறந்தவெளியில் மலம் கழிப்போரின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.
திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்தும் கர்ப்பிணிப் பெண்களுக்கு குறைப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும், எடை குறைவான குழந்தைப் பிறப்பதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாகவும், ஒடிசாவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பெண்கள் உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு, சுனிதி கழிப்பறை திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் நாப்கினை அகற்றி, மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு, சுனிதி கழிவறையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த கழிப்பறையில் இந்திய மற்றும் வெஸ்ட்டர்ன் டாய்லட் வசதிகளும், நாப்கினை எரிப்பதற்கான கருவிகளும் உள்ளன. இதுபோன்ற கழிப்பறைகள் 8 இடங்களில் நிறுவப்படவுள்ளன என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ந.மனோகர், நகர்நல அலுவலர் மோ.அனிதா, அமெரிக்க சுகாதார நிபுணர் ரோசன்ராஜ் ஷெஷ்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.