கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள சந்தையூர் ஊராட்சிக்குள்பட்டது தெற்கு வலையப்பட்டி. இந்த கிராமத்தில் 4 ஆழ்துளைக் கிணறுகளில், 2 கிணறுகள் பயனற்றுள்ளது. 2 கிணறுகளில் மட்டுமே சிறிதளவு தண்ணீரே உள்ளதால், 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதனால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, கூடுதலான ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணக் கோரி, தெற்கு வலையப்பட்டி பொதுமக்கள் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், அலுவலகத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளோம் என அக் கிராம மக்கள் தெரிவித்தனர்.