திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகளில் நகைகள் மற்றும் பொருள்கள் மற்றும் ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன.
புதுஆயக்குடி பள்ளிவாசல் தெற்கு தெருவில் மெக்கானிக் கடை வைத்துள்ள ஷாஜஹான்(60) என்பவர் வீடும், ஜான்பாட்சா (58) என்பவர் வீடும் எதிரெதிரே உள்ளன. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் ஜான்பாட்சா வீட்டின் மாடியில் உள்ள குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் பீரோவில் இருந்த 3 பவுன் நகை, புதுத்துணிகள், ரொக்கம் மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி, கட்டில் என அனைத்துப் பொருள்களும் எரிந்து சேதமடைந்தன. இவரது வீட்டில் பற்றியத் தீ எதிரே உள்ள ஷாஜஹான் வீட்டின் மாடியில் இருந்த குடிசையிலும் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த பீரோ, குடும்ப அட்டை, வீட்டு ஆவணங்கள், கட்டில், சலவை இயந்திரம், புதுத்துணிகள், 3.5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவை எரிந்து சேதமடைந்தன. இதையடுத்து அங்கு வந்த பழனி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவிபத்து குறித்து ஆயக்குடி போலீஸார், வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.