கொடைக்கானல் ஏரியில் வெள்ளிக்கிழமை (அக். 6) மாநில அளவிலான ஸ்கல் படகுப் போட்டி நடைபெறுமா என்ற குழப்பத்தில் வீரர்கள் உள்ளனர்.
கொடைக்கானல் போட் மற்றும் ரோயிங் கிளப் சார்பில் நடைபெறும் இந்தப் போட்டியில் 60-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவில் நடைபெறும் ஸ்கல் படகுப் போட்டியில் பங்கு பெறுவர். இதற்காக கொடைக்கானல் ஏரியில் கடந்த ஒரு வாரமாக வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி சார்பில் ஏரியில் ஸ்கல் படகுப் போட்டி நடத்தக் கூடாது என தனியார் படகு குழாமிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஏரியில் ஸ்கல் படகுப் போட்டி நடத்துவதற்கு நீதிமன்றம் மூலமாக உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தனியார் படகு குழாம் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனால் போட்டி நடைபெறுமா என்ற குழப்பத்தில் வீரர்கள் உள்ளனர்.