திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வரும் பன்றிகளை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நத்தம் பேரூராட்சிக்குள்பட்ட 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், செந்துறை சாலையில் உள்ள நேரு நகர் குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகின்றன. இந்த குப்பைக் கிடங்கில் உள்ள கழிவுகளை உண்பதற்காக, கரடிக்குட்டு, காமராஜ்நகர், ராக்காச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் பன்றிகள் வருகின்றன. பின்னர், இந்த பன்றிகள் வளர்க்கப்படும் இடங்களுக்கு திரும்பிச் செல்லும் போது, சாலையோரங்களிலும், தெருக்களிலும் சுற்றித் திரிகின்றன.
இதனால், நத்தத்தின் பல்வேறு பகுதிகளிலும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. மேலும், சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளும், பன்றிகளால் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கும் பகுதியிலும் பன்றிகள் சுற்றித் திறிகின்றன. இதனால் இப்பகுதிகளில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும், பன்றிகள் வளர்ப்போருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி கட்டுப்படுத்துவதற்கும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.