உசிலம்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு சிக்னல் கம்பம் மீது சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மோதியதில் சிக்னல் கம்பம் முறிந்து சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உசிலம்பட்டி கீழ பள்ளி தெருவை சேர்ந்த சி.என்.கே. ஜவுளி கடை உரிமையாளர் மீராமைதீன் (61). இவர் வியாபார விஷயமாக மதுரை சென்றுவிட்டு இரவு உசிலம்பட்டி திரும்பியுள்ளார். உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் இறங்கி சாலையை கடந்து சென்றுகொண்டிருந்தபோது கரூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு சிமெண்ட் ஏற்றி வந்த லாரி உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள சிக்னல் கம்பம் மீது மோதியது. இதில் சிக்னல் கம்பம் முறிந்து மீரா மைதீன் தலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகர் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.