பழனியில் முன்னாள் கவுன்சிலரை தாக்கிய 2 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
பழனி சத்யா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (56). இவர் அதிமுக முன்னாள் கவுன்சிலர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டன் (24), சக்திவேல்(25) ஆகியோர் பழனிச்சாமியை தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பழனிச்சாமி பழனி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மற்றொரு சம்பவம்: பழனி அடிவாரம் மதனபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் துர்க்கைராஜ் (36). இவர் சனிக்கிழமை அடிவாரம் பகுதியில் இரவு நடந்து சென்று கொண்டிருந்த போது மதுரையைச் சேர்ந்த சதீஷ்குமார் (45), பழனியைச் சேர்ந்த முரளிதரன் (26), மாதவன் (28) ஆகியோர் வழிமறித்து அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த துர்க்கைராஜ், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து அடிவாரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துர்க்கைராஜ் மீது முன்னரே இரட்டைக்கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.