பழனியில் அதிமுக முன்னாள் கவுன்சிலரை தாக்கிய விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதன்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
பழனி சத்யாநகரை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் பழனிச்சாமி கடந்த சில நாள்களுக்கு முன் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலரால் தாக்கப்பட்டார். இதையடுத்து 8 பேர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில் பழனி நகர் போலீஸார்3 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் புதன்கிழமை ஆதித்தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்த தலித் சிவா, பழனிச்சாமி மற்றும் தமிழ்ப்புலிகள், தமிழர் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவர்கள் பழனி- புதுதாராபுரம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்ய வலியுறுத்தியும், சத்யா நகர் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரியும் கோஷமிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த டிஎஸ்பி. முத்துராஜன் மற்றும் போலீஸார், அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.