இணைய வழி பத்திரப்பதிவு முடக்கம்: பொதுமக்கள் அதிருப்தி
இணைய வழிப் பத்திரப் பதிவு, புதன்கிழமை இணைய தள முடக்கத்தால் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பிப்.1 ஆம் தேதி முதல் இணைய வழியில் பத்திரப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக புதிய மென்பொருள் மூலம் இணைய தள வசதியுடன் அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் நவீனப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இணைய தள முடக்கம் காரணமாக, புதன்கிழமை நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுகள் முடங்கின.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பத்திரப் பதிவு அலுவலகத்தில் இணைய வழிப் பத்திரப்பதிவு கடந்த 5 மாதங்களுக்கு முன் சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்படி, பத்திரப் பதிவு செய்த சிறிது நேரத்திலேயே, 3 பயனாளிகளுக்கான பத்திரங்களை, வத்தலகுண்டு சார் பதிவாளர் விவேகானந்தன் உடனடியாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து அங்கு பத்திரப் பதிவுக்காக 20-க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர்.
ஆனால், நண்பகல் 12 மணிக்குப் பின் இணைய தள சேவை முடக்கத்தால் புதன்கிழமை முழுவதும் பத்திரப் பதிவு நடைபெறவில்லை. இதனால் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.