சென்னை முதல் மதுரை வரை இரட்டை பாதையில் ரயில் சேவை கிடைக்கும் வசதி ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்-திருச்சி இடையிலான 2ஆவது அகல ரயில் பாதை அமைக்கும் பணி, கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதில், திண்டுக்கல் முதல் தாமரைப்பாடி வரையிலான 10 கி.மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள 2ஆவது அகல ரயில்பாதை ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதேபோல், திருச்சி முதல் கல்பட்டிசத்திரம் வரையிலும் 2ஆவது அகலப் பாதை அமைக்கும் பணி முடிவடைந்துவிட்டது.
தாமரைப்பாடி முதல் திருச்சி மாவட்டம் கல்பட்டிசத்திரம் வரையிலான 27 கி.மீட்டர் தொலைவுக்கு அகல ரயில்பாதை அமைக்கும் பணியில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில், 27 கி.மீட்டர் நீளத்துக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, முதல் கட்ட சோதனை ஓட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்பட்டிசத்திரத்திலிருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள தங்கம்மாபட்டியிலிருந்து தாமரைப்பாடி வரை 25 கி.மீட்டர் தொலைவுக்கு 140 கி.மீட்டர் வேகத்தில் ஒற்றை என்ஜினை இயக்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்ததாக தெரிவித்த ரயில்வே அதிகாரிகள், பிப்ரவரி 20ஆம் தேதி முதன்மைப் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வுக்குப் பின் ரயில்கள் இயக்குவதற்கு அனுமதி கிடைக்கும் என்றனர்.
திருச்சி-திண்டுக்கல் இடையிலான 2ஆவது அகல ரயில் பாதை பயன்பாட்டுக்கு வந்தால், சென்னை முதல் மதுரை வரை இரட்டை அகல ரயில்பாதை வசதி கிடைக்கும். அதன்மூலம், விரைவு ரயில்களின் பயண நேரம் குறைவதோடு, மற்றொரு ரயிலுக்காக நிறுத்தி வைக்கப்படும் நிலையும் தவிர்க்கப்படும் என்பதால், ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.