மருதாநதி பகுதியில் உள்ள 600 மாமரங்கள் புதன்கிழமை ஏலம் விடப்பட்டதில், கூச்சல் குழப்பத்துக்கிடையே, கடந்த ஆண்டை விட ரூ.1.59 லட்சம் குறைவாக வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையம் அடுத்துள்ள மருதாநதி அணைப் பகுதியில் பொதுப் பணித்துறையினருக்கு சொந்தமான 600 மாமரங்கள் ஆண்டுதோறும் குத்ததைக்கு ஏலம் விடப்படுவது வழக்கம். அதே போல் நிகழாண்டுக்கான குத்தகை, நிலக்கோட்டை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சௌந்தரம் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. ஏலம் தொடங்கும் முன், கடந்த ஆண்டு குத்தைக்கு எடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், கடந்த முறை இழப்பு ஏற்பட்டதால் மீண்டும் தனக்கே குத்தகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்றுக் கொள்ள மறுத்த பொதுப்பணித் துறையினர், ரூ.6.88 லட்சத்துடன் ஏலத்தை துவக்கினர்.
அப்போது, தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித்பிரபு என்பவர் ஏலம் கேட்கத் தொடங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அய்யம்பாளையம் பகுதி பிரமுகர்கள், உள்ளூர் விவசாயிகள் தவிர வெளியூர் நபர்களுக்கு ஏலம் வழங்க கூடாது என வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே அய்யம்பாளையத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் ரூ.7.40 லட்சத்துக்கு ஏலம் கேட்டார். அப்போது கூச்சல் குழப்பம் நிலவியதையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் ஏலம் நடைபெறும் என எதிர்பார்த்திருந்த நிலையில், பெரியகுளத்தைச் சேர்ந்த ரஞ்சித் பிரபு என்பவருக்கே ரூ.7.41 லட்சத்திற்கு ஏலம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ரூ.9 லட்சத்துக்கு ஏலம் போன மாமரங்கள், அரசியல் காரணங்களுக்காக, நிகழாண்டு ரூ.1.59 லட்சம் குறைவாக ஏலம் விடப்பட்டது உள்ளூர் விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.