பழனி சண்முகநதியில் உள்ள பாலம் நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு இல்லாததால், மிகவும் சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சண்முகநதியின் மீது வாகனங்கள் செல்ல பாலம் கட்டப்பட்டது. பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதியின் மேலே கட்டப்பட்ட இந்தப் பாலம், கட்டி முடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்தப் பாலத்தின் மேல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச் சுவர் மிகவும் சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பாலத்தை கடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத் துறைக்கு பலமுறை பொதுமக்கள் புகார் செய்தும் எந்தவித பலனுமில்லை. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன் பாலத்தையும், தடுப்புச் சுவரையும் சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.