திண்டுக்கல் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்கையை வெள்ளிக்கிழமை பாதித்த கஜா புயல், ரயில் சேவையையும் முடக்கியது.
திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரை அடுத்துள்ள முருகம்பட்டி பகுதியில் மதுரை திண்டுக்கல் ரயில் பாதையில் வியாழக்கிழமை, மழை மற்றும் சூறாவளி காற்றுக் காரணமாக பாறை உருண்டு விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே ஊழியர்கள், திண்டுக்கல் மற்றும் கொடைரோடு ரயில் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதேநேரத்தில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தை நோக்கி நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் விரைவு ரயில், வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் விழுந்த பாறையை அகற்றும் வரை, அந்த ரயில் கொடைரோடு ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக 2.15 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. அதேபோல் மதுரையிலிருந்து சென்னை செல்லும் வைகை விரைவு ரயில், திருச்சி மாவட்டம் வையம்பட்டி பகுதியில் மின்கம்பத்தில் மரம் முறிந்து விழுந்தததால் நிறுத்தி வைக்கப்பட்டது. மின்கம்பம் சரி செய்யப்பட்டு, 12.45 மணிக்கு மணப்பாறை நோக்கி சுமார் மூன்றரை மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
அமிர்தா விரைவு ரயில்: திண்டுக்கல் மாவட்டம், பழனி சத்திரப்பட்டி இடையே தண்டவாளத்தில் மரம் முறிந்து விழுந்ததால், திருவனந்தபுரத்திலிருந்து பாலக்காடு, பழனி வழியாக மதுரை செல்லும் அமிர்தா விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், 11.50 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் வர வேண்டிய அந்த ரயில் 2 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 1.55 மணிக்கு வந்தது.
ஈரோடு பயணிகள் ரயில்: திருநெல்வேலியிலிருந்து ஈரோடு வரை செல்லும் பயணிகள் ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து 11.20 மணிக்கு புறப்படுவது வழக்கம். இந்நிலையில், வையம்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வைகை விரைவு ரயிலுக்காக திண்டுக்கல் ரயில் நிலையத்திலிருந்து மாற்று என்ஜின் அனுப்பப்பட்டது. இதனால், ஈரோடு பயணிகள் ரயிலை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனிடையே, கோவையிலிருந்து நாகர்கோயில் வரை செல்லும் பயணிகள் ரயில், வெள்ளிக்கிழமை திண்டுக்கல் ரயில் நிலையத்தோடு நிறுத்தப்பட்டது. இதனால், அந்த என்ஜின் ஈரோடு பயணிகள் ரயிலாக இயக்கப்பட்டது. அதில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காத்திருந்த திருநெல்வேலி பயணிகள் மாலை 3 மணிக்கு புறப்பட்டுச் சென்றனர். அதன் பின்னர், வைகை விரைவு ரயிலுக்காக அனுப்பப்பட்ட என்ஜின் கொண்டு வரப்பட்டு, ஈரோடு பயணிகள் ரயில் 5.50 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
குருவாயூரிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், பிற்பகல் 1.15 மணிக்கு பதிலாக பிற்பகல் 3.20 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு தாமதமாக வந்தது. அதேபோல், சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில், திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 2.40 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது.