திண்டுக்கல் மாவட்டம் பழனி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி புதுநகரை சேர்ந்த பழனிச்சாமி மனைவி ஜான்சிராணி (55 ). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்சிராணி கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அவர் கோவை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஜான்சி ராணி சனிக்கிழமை உயிரிழந்தார். பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே 2 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் மயிலாடும் பாறை அருகே பின்னத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் மனைவி பாண்டியம்மாள் (36). இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் பாண்டியம்மாள் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து கடந்த 4 நாள்கள் முன்பு, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு நடந்த மருத்துவப் பரிசோதனையில் பாண்டியம்மாளுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் பாண்டியம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். ஆண்டிபட்டி பகுதியில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
இதனால் ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுகாதாரத்துறையினர் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.