திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் கஜா புயலால் பழமையான கட்டடம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிந்து விழுந்தது.
ஒட்டன்சத்திரம் தாராபுரம் பிரிவு அருகே ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பழமையான கட்டடம் உள்ளது. இக் கட்டடத்தில் பேக்கரி, மளிகைக் கடை மற்றும் ஜவுளிக் கடை ஆகியன இயங்கி வந்தன.இந் நிலையில் பழமையான கட்டடம் என்பதால் அந்த கட்டடத்தை இடித்து விட்டு புதிய கட்டடம் கட்ட கட்டட உரிமையாளர் ராமமூர்த்தி முடிவு செய்தார்.அதன் பேரில் பேக்கரி மற்றும் மளிகைக் கடை இடிக்கப்பட்டது. ஆனால் ஜவுளிக்கடைக்காரர் மட்டும் கடையை காலி செய்ய மறுத்து வந்தார். மேலும் பழமையான கட்டடம் என்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. அதனால் ஜவுளிக் கடையை காலி செய்யச் சொல்லி ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகமும் அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியது.அவற்றை பொருள்படுத்தாமல் ஜவுளிக்கடை உரிமையாளர் இருந்தார். இந்த நிலையில் கஜா புயல் மற்றும் பலத்த மழை காரணமாக கட்டடத்தில் மழைநீர் தேங்கி இருந்ததால் எதிர்பாராமல் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென அந்த கட்டடம் இடிந்து விழுந்தது. அன்றைய தினம் கடை விடுமுறை என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த ஒட்டன்சத்திரம் காவல் துறை மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கட்டட இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.