வத்தலகுண்டு அருகே தனியார் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டதில், 3-ஆம் ஆண்டு மாணவர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள சிங்காரக்கோட்டை பகுதியில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது.
இந்த போட்டியின்போது, வணிகவியல் துறை முதலமாண்டு மாணவர்களுக்கும், 3-ஆம் ஆண்டு மாணவர்களுக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கள்கிழமை நண்பகல் உணவு இடைவேளையின்போது, இருதரப்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், முதலாமாண்டு மாணவர்கள் தாக்கியதில், 3-ஆம் ஆண்டு மாணவர்களான கன்னிவாடியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த் (20), பூசாரிப்பட்டியைச் சேர்ந்த பாண்டி (20) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இருவரும் வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.