திண்டுக்கல் மாநகராட்சி 47 மற்றும் 48ஆவது வார்டுகளுக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 1 மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்து, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர்.
அப்போது மாநகராட்சி வளாகத்திலுள்ள பொறியாளர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றி, ஜிக்கா திட்டத்தின் கீழ் புதிய குழாய் பதிக்கப்பட்ட பின்னர் அனைத்துப் பகுதிகளிலும் சீராக தண்ணீர் கிடைக்கும் எனத் தெரிவித்தனர்.
ஆனால், புதிய குழாய் பதிக்கப்பட்ட பின்னர், ஏற்கெனவே கிடைத்து வந்த தண்ணீரை கூட பெற முடியவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் கண்டுகொள்ளவில்லை என்றனர்.
இதனிடையே பொதுமக்கள் தர்னா போராட்டம் குறித்து அறிந்த மாநகராட்சி அலுவலர்கள், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பதாக அலுவலர்கள் உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.