பழனியில் பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனை கடையில் செவ்வாய்க்கிழமை இரவு பணம் திருடப்பட்ட சம்பவத்தில், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பழனியை அடுத்த ஆயக்குடியைச் சேர்ந்தவர் காஜாமைதீன். இவர் பழனி கிழக்குரத வீதியில் மாரியம்மன் கோயில் அருகே பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார்.
இவர் செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல கடையை அடைத்து விட்டு, புதன்கிழமை காலை கடையை திறந்தார். அப்போது கடையின் பின்புறம் உடைக்கப்பட்டிருந்ததும், ஆங்காங்கே ரத்தக்கறைகள் இருந்ததையும் அவர் பார்த்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பணம் வைக்கும் மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரொக்கம் ரூ.25 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து பழனி நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அங்கு வந்த போலீஸார் தடயங்களை சேகரித்தனர். அப்போது கடையின் உள்ளே இருந்த கண்காணிப்பு கேமராக்களில் வேட்டி, துண்டுடன் மர்ம நபர் உள்ளே புகுந்ததும், சுற்றிப் பார்த்து விட்டு, அவர் பணத்தை திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது. மேலும், அவர் காலில் ரத்தக் காயம் இருந்ததும் அதில் தெரிந்தது.
இதையடுத்து அந்த மர்ம நபரின் உருவம் தெளிவாக பதிவாகி இருப்பதால் அவரை விரைவில் பிடித்து விடுவோன் என போலீஸார் தெரிவித்தனர்.