பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோயில், பஞ்சாமிர்த நிலையம், ஒருங்கிணைந்த முடிக்கொட்டகை நிலையம் போன்ற பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழனியில் வியாழக்கிழமை திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி முரளிசங்கர், குற்றவியல் நீதிபதி நம்பி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அடிவாரம் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் ஆய்வு செய்த நீதிபதிகள் பக்தர்கள் நிற்கும் தரிசன வரிசை, கட்டணச்சீட்டு முறை உள்ளிட்டவற்றை கேட்டறிந்தனர். தொடர்ந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கும் மையத்தை ஆய்வு செய்தனர். பஞ்சாமிர்தத்துக்கு வேண்டிய பழங்கள், சர்க்கரை, தேன் போன்றவை தரமானதாக உள்ளதா என்றும், பஞ்சாமிர்த பேக்கிங்கில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி ஆகியன பதிவிடப்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்தனர். பணியாளர்களின் வருகைப்பதிவேடும் ஆய்வு செய்யப்பட்டது.
நிறைவாக ஒருங்கிணைந்த முடிக்கொட்டகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பக்தர்களுக்கு வழங்கும் காணிக்கை டிக்கெட், தரிசன வரிசை, தண்ணீர் உள்ளிட்ட வசதி குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி முரளி சங்கர் கூறியது: திண்டுக்கல்லில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், தாடிக்கொம்பு செளந்திரராஜப் பெருமாள் கோயில்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில், உபகோயில்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இம்மாத இறுதியில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர்
(பொறுப்பு) செந்தில்குமார், டிஎஸ்பி., விவேகானந்தன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.