உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது என்பதற்காக, பல ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையை மாற்றி சபரிமலைக்கு செல்லமாட்டோம் என, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் வெள்ளிக்கிழமை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு பகுதியில் கலியுகவரதன் ஐயப்பன் கோயில் உள்ளது. இக்கோயில் நிர்வாகம் சார்பில், சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக, பெண்கள் விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கோயில் நிர்வாகக் குழுத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக முழக்கமிட்ட பெண்கள், 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள் சபரிமலைக்கு செல்லமாட்டோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதேபோல், 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு மாலை அணிவிக்க மாட்டோம், இருமுடி கட்டமாட்டோம் என கோயில் நிர்வாகம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த முருகேஷ்வரி என்பவர் கூறியது:
உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குச் செல்வதற்கே நாங்கள் தயங்குவோம். தற்போது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துவிட்டது என்பதற்காக, பாரம்பரியமான நடைமுறைகளை மீறி நாங்கள் சபரிமலைக்குச் செல்லமாட்டோம் என்றார்.