வேடசந்தூர் வட்டாரத்தில், தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, மாவட்டக் குழுத் தலைவர் ஆர். முத்துசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, வேடசந்தூர் வட்டாரத்தில் தேசிய ஊரக வேலை திட்டத்தில் பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். அதற்கான கூலியாக ரூ. 250 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதில், நாகையக்கோட்டை, நல்லமன்னார்கோட்டை ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.