பழனியில் வாரந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் தொடக்கம்
பழனியில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பாரம்பரிய சித்த மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
பழனி-திண்டுக்கல் சாலையில் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரி எதிரே போகர் சித்தாந்த சபை செயல்பட்டு வருகிறது. இந்த சபையின் மூலமாக, இலவச தியானப் பயிற்சி வகுப்புகள், வாரந்தோறும் கிரி வீதியில் பக்தர்களுக்கு உணவும், மாதந்தோறும் கண்ணுக்கு நோய் தீர்க்கும் சொட்டு மருந்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இலவசமாக பாரம்பரிய சித்த மருத்துவ சிகிச்சை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முகாமை, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் தொடக்கி வைத்தார். முன்னதாக, சபை நிறுவனர் வசீகரன் வரவேற்றார்.
முகாமில், மருத்துவர்கள் ராமலிங்கம், சீனிவாசன், செல்வி, ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்று, பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று பயனடைந்தனர்.
இந்த முகாமானது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடத்தப்படும் என்றும், பங்கேற்பவர்களுக்கு இலவசமாக மருந்துகளும் வழங்கப்படும் என்றும், சபையினர் தெரிவித்தனர்.