வடமதுரையில் கோயில் பூசாரி வெட்டுக் காயங்களுடன் திங்கள்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள நைனான்குளத்துப்பட்டியைச் சேர்ந்தவர் முத்துசாமி (60). இவர், அதே பகுதியிலுள்ள ஒரு கோயிலில் குறி சொல்லும் பூசாரியாக இருந்து வந்தார். இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு மகன், மகள் என மொத்தம் 6 பேர் உள்ளனர்.
இதனிடையே, 10 ஆண்டுகளுக்கு முன் நாச்சியம்மாள் என்பவரை 2ஆவது திருமணம் செய்துகொண்ட முத்துசாமி, அவருடன் வடமதுரை மந்தைக்குளம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதனால், முத்துசாமிக்கும், முதல் மனைவியான வசந்தா மற்றும் மகன்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. திங்கள்கிழமை, வடமதுரையிலிருந்து நைனான்குளத்துப்பட்டிக்குச் சென்ற முத்துசாமிக்கும், மகன் வீரமணிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், வெளியில் செல்வதாகக் கூறிச் சென்ற முத்துசாமி வீடு திரும்பவில்லையாம்.
இந்நிலையில், வடமதுரை மந்தைகுளம் அருகே வெட்டுக் காயங்களுடன் முத்துசாமி இறந்து கிடப்பதாக, அப்பகுதியினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வடமதுரை போலீஸார், முத்துசாமியின் சடலத்தைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.