வேடசந்தூர் அருகே புதன்கிழமை இரவில் 2 இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அடுத்துள்ள மல்வார்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஆவுடையப்பன் (50). இவர், புதன்கிழமை இரவு மல்வார்பட்டியிலிருந்து மாரம்பாடி நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார். அதேநேரம், வேடசந்தூர் அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் சுரேஷ்குமார் (38) என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் மாரம்பாடியிலிருந்து அய்யம்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளார்.
இந்த 2 வாகனங்களும், மாரம்பாடி பிரிவு அருகே நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில், விவசாயி ஆவுடையப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சுரேஷ்குமார், வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து வேடசந்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.