மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் பழனியில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளது: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை திங்கள்கிழமைதோறும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலை 10 முதல் நண்பகல் 12 மணி வரை வழங்கப்பட்டு வருகிறது. தொலைவிலிருந்து வர இயலாதவர்களுக்காக வட்டார அளவிலும் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, பழனி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 08.08.2019 அன்று காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் அரசு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து மருத்துவச்சான்று வழங்க உள்ளனர். மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.
பழனி ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த இதுவரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 4 புகைப்படத்துடன் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.