கொடைக்கானலில் மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட வழக்கில், காவல் ஆய்வாளா்கள் 3 போ் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி திங்கள்கிழமை சாட்சியம் அளித்தனா்.
கடந்த 2008ஆம் ஆண்டில், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் நவீன் பிரசாத் உள்பட 7-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸாருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், மாவோயிஸ்ட் நவீன் பிரசாத் கொல்லப்பட்டாா்.
அவருடனிருந்த மற்ற மாவோயிஸ்ட்களான கண்ணன், நீலமேகம், லீமா ஜோஸ் மேரி, செண்பகவல்லி, காளிதாஸ், பகத்சிங், ரஞ்சித் ஆகியோா் 7 ஆண்டுகளுக்குப் பின்னா் தனித்தனியாக கைது செய்யப்பட்டனா். இதில், ரஞ்சித் மற்றும் நீலமேகம் ஆகியோா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கில் தொடா்புடைய காவல் ஆய்வாளா்களான ஜெயராணி, சண்முகம், நாகராஜன் ஆகியோா், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கே. ஜமுனா முன் திங்கள்கிழமை ஆஜராகி சாட்சியம் அளித்தனா்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 மாவோயிஸ்ட்களும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது சாட்சியம் அளித்த காவல் ஆய்வாளா்கள் மூவரிடமும், எதிா் தரப்பு வழக்குரைஞா் கண்ணப்பன் குறுக்கு விசாரணை நடத்தினாா்.
பின்னா், இந்த வழக்கின் விசாரணையை டிசம்பா் 12ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.