தமிழகத்தில் திருக்கோயில் பணியாளர்களுக்கான ஊதிய விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு பழனி திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் திருக்கோயில்களில் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணிக்கொடை, சமவேலை, சமஊதியம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்கம், பழனி திருக்கோயில் பணியாளர்கள் சங்கம், திருக்கோயில் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 25 கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந் நிலையில் இவற்றில் 21 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறநிலையத்துறை ஒப்புக் கொண்டது. ஆனால் பல மாதங்களாகியும் அவை நிறைவேற்றப்படாததால் ஜனவரி 23 ஆம் தேதி மீண்டும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இப் போராட்டம் நடைபெற்றால் கோயில் பூஜைகள் தடைபடும் என திருத் தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் வரும் மார்ச் 15 ஆம் தேதிக்குள் பணிக்கொடை வழங்கவேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து பதிலளிக்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து அறநிலையத்துறை பரிசீலிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு பழனி திருக்கோயில் பணியாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் கூறுகையில், இந்த வழக்கின் தீர்ப்பில் பெரும்பாலானவை திருக்கோயில் பணியாளர்களுக்கு ஆதரவாகவே வந்துள்ள நிலையில் நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்றனர்.