திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே முதியவர் சனிக்கிழமை கொலை செய்யப்பட்டார். மேலும், இதுதொடர்பாக துக்கம் விசாரிக்க சென்ற அவரது உறவினரும் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
நிலக்கோட்டை அடுத்துள்ள ஆவாரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (70). இவரது தம்பி வேலு. இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன் விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், ஆவாரம்பட்டி பகுதியிலுள்ள தோட்டத்திற்கு மல்லிகை பூக்கள் பறிக்கச் சென்ற முத்தையாவுக்கும், வேலு மகன் சதீஷுக்கும் (30) இடையே சனிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த சதீஷ், முத்தையாவை தள்ளிவிட்டுள்ளார். இதில், கீழே விழுந்த முத்தையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, சதீஷ் தப்பியோடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த விளாம்பட்டி போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சதீஷை தேடி வருகின்றனர்.
துக்கம் விசாரிக்க வந்தவர் சாவு: முத்தையாவின் சடலம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பதை அறிந்த அவரது உறவினரான ஆவாரம்பட்டியைச் சேர்ந்த மாயி (46), இருசக்கர வாகனத்தில் அங்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, மதுரையிலிருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்ற தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாயி, சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மாயி உயிரிழந்தார். விபத்து குறித்து நிலக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.