வத்தலகுண்டு அருகே நடைபெற்ற வழுக்கு மரம் ஏறும் போட்டியில், மாமனார்களின் தடையை கடந்து மருமகன்கள் பண மூடிப்பை கைப்பற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள பா.விராலிப்பட்டி கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு 3 ஆம் ஆண்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.
இதனையொட்டி, கிராம மைதானத்தில் வழுக்கு மரம் ஊன்றும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றது. வழுக்கு மரத்தின் உச்சியில் ரூ.10 ஆயிரத்தை கட்டி வைத்த மாமனார்கள், தங்களுக்கு மருமகன் முறையிலுள்ள திருமணமான, திருமணம் ஆகாத இளைஞர்களை போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, வியாழக்கிழமை மாலை தொடங்கிய போட்டியில், 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டிப் போட்டு வழுக்கு மரத்தில் ஏற முயற்சித்தனர். அதே நேரத்தில் இளைஞர்களை ஏற விடாமல் தடுக்கும் விதமாக மாமனார்கள் சார்பில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதனையும் மீறி இளைஞர்கள் ஒன்று திரண்டு வழுக்கு மரத்தின் உச்சியிலிருந்த பண முடிப்பை வெற்றிகரமாக கைப்பற்றினர்.
இந்த போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தபோதிலும், இளைஞர்கள் சார்பில் முதன் முறையாக பண முடிப்பு கைப்பற்றப்பட்டதால், போட்டியை காண்பதற்காக திரண்டிருந்த மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.